ஏழரைச்சனியால் பீடிக்கப்பட்டவர்களுக்கான திருக்கோவில் / பெரிய ஆஞ்சநேயர் கோவில் - ஆம்பூர், வேலூர் மாவட்டம்.
ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடந்த சமயம். லட்சுமணன் மயங்கிவிட்டான். அப்போது லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற தேவையான மூலிகை சஞ்சீவி மலையில் இருப்பதாக ஜாம்பவான் கூறினார். அங்கிருந்த அனுமன் ராமனிடம், "நான் சென்று மூலிகைகளை கொண்டு வருகிறேன்" என்று கூறினான். ராமனும், அனுமனை வாழ்த்தி "வெற்றி உண்டாகட்டும். இக்கட்டான சூழலில் என்னை நினைவில் வைத்து கொள்" என்றார். அனுமனும் மகிழ்ச்சியாக விடைபெற்று சஞ்சீவி மலை நோக்கி பயணப்பட்டான்.
அப்போது, ராவணன் தனது தவவலிமையால் நவக்கிரகங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தான். லட்சுமணனுக்கு தேவையான மூலிகைகளை அனுமன் எடுத்து செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி நவக்கிரகங்களுக்கு மட்டுமே உரியது. அவற்றிலும் நவக்கிரகங்களில் பெரியவனான சனி பகவான்தான் அதைச் செய்ய முடியும் என்று ராவணனுக்கு அறிவுறுத்தினார்கள். ராவணன் சனிபகவானை அழைத்து மூலிகையை எடுத்துச் செல்லாமல் அனுமனைத் தடுத்து நிறுத்துவது உன்னுடைய பொறுப்பு என்று கட்டளையிட்டான்.
![]() |
ராவணன் |
தர்மத்தை மீறிய செயல் இது என்று தெரிந்திருந்தும், சனிபகவான் ராவணனின் கட்டளையை ஏற்று அனுமனை நாடிச் சென்றார். அனுமன் சஞ்சீவி மலையில் மூலிகையைத் தேடிக் கொண்டிருந்தார். நெடுநேரம் ஆகியும் மூலிகையைக் கண்டறிய இயலாததால் அனுமன், சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்தார். சஞ்சீவி மலையையே பெயர்த்து தன் ஒற்றை விரலில் நிறுத்தி லட்சுமணனைக் காப்பாற்ற விரைந்து சென்ற அனும னை வழியில் தடுத்தார் சனிபகவான்.
"வீண் விவாதம் செய்யவோ உன்னிடம் போர் புரியவோ நான் இங்கு வரவில்லை. எனக்கு அதிக வேலையிருக்கிறது" என்று அனுமன், சனிபகவானை எச்சரிக்கை செய்தார். ஆனால், அனுமன் என்ன சொல்லியும் கேளாமல் சனி பகவான் அனுமனைத் தடுக்கவே, சனியை கீழேதள்ளி தன்பலம் அனைத்தையும் கொண்டு சனிபகவானை நசுக்கினார் அனுமன். தாங்க முடியாத வலியால் சனி பகவான் கதறினார். தம்மை விட்டுவிடும்படி அனுமனிடம் கெஞ்சினார்.
அனுமன்தான் ராமபக்தனாயிற்றே. அதனால் சனிபகவான் "ராமா... ராமா.." என்று அழைத்தார். அனுமனின் பிடி சிறிது சிறிதாக இறங்கிற்று. ``ராம நாமத்தால் தப்பி பிழைத்தாய். உன்னால் பீடிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தும்போது, ராமனின் திருநாமத்தை சொல்பவர்களை தொல்லை செய்யக்கூடாது'' என்று எச்சரிக்கை செய்து, சனிபகவானின் சம்மதம் பெற்றபிறகே சனிபகவானை விடுவித்தார்.
ஆஞ்சநேயன், சனிபகவானை காலால் அழுத்தும் திருக்கோலத்தை கொண்டிருக்கிறது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்திருக்கும் பெரிய ஆஞ்சநேயர் கோவில். சனி திசை நடப்பவர்களும், சனி தோஷம் உள்ளவர்களும், ஏழரைச்சனியால் பீடிக்கப்பட்டவர்களும் இத்திருத்தலத்துக்கு வந்து வழிபட்டால், சனிபகவானின் தொல்லையிலிருந்து மீளலாம்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து 51 கி.மீ., தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
தேதி: 14.03.2024
கருத்துகள்
கருத்துரையிடுக