பித்ருக்களின் மனம் குளிர மஹாளய பக்ஷம் அவசியம்! / லக்ஷ்மிபதிராஜாவின் சிறப்பு கட்டுரை.
மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களின் ஆராதனை க்ரமம் (ஸ்ராத்தம் - தர்ப்பணம்) மற்றும் பலன்கள்!
பகுதி - 2
தொடர்கிறது...
ஸ்ரார்த்தத்திலே 'த்வாதஸ பித்ருக்கள்', 'காருண்ய பித்ருக்கள்', 'ஸர்வ பித்ருக்கள்' என மூன்று வகைகள் உண்டு. இந்த மஹாளய பக்ஷத்திலே இவர்கள் எல்லோரையும் நினைத்துக் கொள்ள வேண்டும். அமாவாஸை தர்ப்பணத்தில் கொடுப்பதுபோல பித்ரு வர்கத்தில் (தந்தை) ஆறு பேர் மற்றும் மாத்ரு வர்கத்தில் (தாய்) ஆறு பேர் என்று த்வாதஸ பித்ருக்களுக்கு இங்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
அதாவது, பித்ரு வர்க்கத்தில் பிதா - பிதாமஹா - ப்ரபிதாமஹா அதாவது தந்தையார், அவருடைய தந்தை, அவருடைய தந்தை என்று மூவர் மற்றும் மாத்ரு வர்க்கத்தில் மாதா - பிதாமஹீ - ப்ரபிதாமஹீ அதாவது தாயார், அவருடைய மாமியார், அவருடைய மாமியார் என்று மூவர். இது மட்டுமல்லாமல் மாத்ரு வர்க்கத்தில் மாதாமஹ - மாது பிதாமஹ - மாது ப்ரபிதாமஹ என தாயாருடைய தந்தை, அவருடைய தந்தை, அவருடைய தந்தை என்பதையும், மேலும், அதைப் போல மாதாமஹீ - மாதுப் பிதாமஹீ - மாது ப்ரபிதாமஹி எனத் தாயாரின் தாயார், அவருடைய மாமியார், அவருடைய மாமியார் ஆகும்.
கடைசி இரண்டு 6 பேரும் மாத்ரு வர்க்கம் ஆகும். இந்த ஆறு மற்றும் அந்த ஆறும் சேர்ந்து த்வாதச பித்ருக்கள் ஆகிறார்கள். இவர்களை ஸ்மரணை செய்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், 'காருண்ய பித்ருக்கள்' என்று ஒரு பிரிவு உண்டு. பித்ரு வர்க்கத்தில் தந்தையின் சகோதரர்கள், அவர்களுடைய பத்தினிகள், தந்தையின் சகோதரிகள், அவர்களுடைய பர்தாக்கள் / கணவன்கள், தாயின் சகோதர, சகோதரிகள் அவர்களுடைய பர்தாக்கள் / கணவன்கள் ஆகும்.
அதே போல், மாமியார், மாமனார், அன்ன ஆகாரம் இட்டு வளர்த்தவர்கள், பிரிய நண்பர்கள், குரு, பாடப் பிரவச்சனம் எடுத்த மகனீயர்கள் என்று நம்மிடம் நெருங்கிய ப்ரீதி வைத்த உறவினர்கள் பட்டியல் ஒன்று உண்டு. இவர்கள் எல்லோரும் சேர்ந்து காருண்ய பித்ருக்கள் ஆவர்.
'ஸர்வ பித்ருக்கள்' என்னும் இந்தப் பட்டியல் எப்போதும் நம் கிரகத்தில் தர்ப்பணம் தருவதற்கான தகுதி இருக்கிறவர்கள் எல்லாம் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. இரண்டு அல்லது மூன்று பிரதிகள் வைத்திருக்க வேண்டும். அதில் பித்ருக்களின் பெயர், கோத்திரம் எல்லாம் விவரமாக எழுதி ஒரு அட்டவணை மாதிரி எழுதி வைக்க வேண்டியது முக்கியமானது.
இந்த மஹாளயபக்ஷ காலத்தில் யாருக்கெல்லாம் ஆராதனை செய்ய வேண்டும், எவ்வளவு சிரத்தையாக எவ்வளவு நாட்கள் செய்ய வேண்டும். செய்ய முடியாதவர்களுக்கு என்னென்ன மாற்று முறைகள் உண்டு என்பதைக் காண்போம்.
மஹாளய பக்ஷ காலத்தில் முக்கியமான தினங்கள் என்ன என்பதையும் காண்போம். 15 நாட்களில் ஏகாதசி தவிர்த்து 14 நாட்கள் செய்ய வேண்டும். முக்கியமான தினங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் முக்கிய ஸ்தானம் 'தந்தையின் ஸ்ராத்த' திதி. மஹாளய பட்சத்தில் வருகிற அந்த திதி விசேஷமானது. இதற்கு முதல் ஸ்தானம் கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு ஸ்ராத்தம் செய்வது ஸ்ரேஷ்டம் என்கிறது நிர்ணயஸிந்து.
இதுவல்லாமல், நான்கு முக்கிய தினங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளில் ஒன்று பரணி நட்சத்திரம் வரக்கூடிய தினமான 'மகா பரணி'. இரண்டாவது அஷ்டமி திதி வருகின்ற 'மத்யாஷ்டமி' என்பதாகும். ஆயுளில் ஒரு தடவையாவது கயாவில் ஸ்ராத்தம் செய்து சமர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் வைகுண்ட யாத்திரையை துவங்குகிறார்கள் என ஸ்ரீ வாதிராஜர் தன்னுடைய 'தீர்த்த பிரபந்தத்தில்' குறிப்பிட்டுள்ளார்.
மஹாபரணி மற்றும் மத்யாஷ்டமி அன்று ஸ்ராத்தம் செய்தால் 'கயாவில் ஸ்ரார்த்தம் செய்த பலன்' கிடைக்கிறது என்பதிலிருந்து அதனுடைய மஹிமை புலப்படுகிறது.
மூன்றாவது, வ்யதீ பாத யோகம் வரக்கூடிய 'மஹாவ்யதீபாத' என்கிற தினம். பஞ்சாங்கத்தில் 27 யோகங்கள் உண்டு. இதில் 17வது வ்யதீபாத யோகம் என்பதாகும். இது முக்கியமாக பித்ரு காரியத்திற்கும் தானம் கொடுப்பதற்கான பர்வகாலம். இதுவே 'மஹாவ்யதீபாத' எனப்படுகிறது.
இதேபோல், தனுர் மாதத்தில் வருவதும்கூட பித்ரு காரியம் செய்ய விசேஷ காலம். நான்காவது 'மஹாளய அமாவாசை'.
இந்த நான்கும் இல்லாமல் இன்னொரு தினம் 'அவிதவா நவமி'. அவிதவா என்றால் விதவை அல்லாதவர் - ஸுமங்கலி என்று அர்த்தம். மஹாளய பக்ஷத்தில் வருகின்ற நவமிக்கு 'அவிதவா நவமி' என்று பெயர். ஸுமங்கலியாக இறந்தவர்களுக்கு இந்நாளிலே ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். சுமங்கலியாக இறந்தவர்களுக்கு, மகன் ஸ்ராத்தம் செய்ய வேண்டும்.
மகன் இல்லாவிட்டால் கணவரே ஸ்ராத்தம் செய்ய வேண்டும். இதில் கணவன் இறந்த பிறகு அவிதவா நவமி நிறுத்தப்பட வேண்டும்.
மஹாளய பக்ஷத்தில் அடுத்து ஒரு முக்கியமான தினம் துவாதசி திதி. 'யதி மஹாளய துவாதஸி' என்று பெயர். குடும்பத்தில் ஸன்யாஸியாக இருந்து பிருந்தாவனமாகியிருந்தால் ஆராதனை செய்வதற்காக ஏற்பட்ட தினம். சில சமயம் ஸன்யாஸிகள் முக்தி அடைந்த சரியான நாளோ திதியோ தெரியாமல் போயிருக்கலாம். அத்தகைய ஸன்யாஸிகளுக்கும் இந்த துவாதசி தினத்தில் ஆராதனை செய்ய வேண்டும்.
(பகுதி - 3 தொடரும்...)
திரு.லக்ஷ்மிபதிராஜா அவர்களின் பிரவச்சனத்தில் இருந்து எழுதப்பட்டவை...
எழுதியவர் மந்த்ராலய மாமி, திருமதி லக்ஷ்மி பார்த்தசாரதி மற்றும் ராஜபாளையம் திருமதி லக்ஷ்மி பாஸ்கரன் அவர்கள்...
Ref: Hari Vamsa, Dharma Sindhu, Nirnaya Sindhu, Sri Sudha Monthly Magazine, Harikathamruthasara, Pravachana by Scholars
இவர்கள் அத்துணை பேருக்கும் நமது பத்திரிகை சார்பாக, கோடான கோடி நன்றிகள்! - ஆசிரியர்
தேதி: 20.09.2024
விசேஷ குறிப்புகள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
பதிலளிநீக்குஉடன் பிறந்தவர்களுக்கு
பதிலளிநீக்கு