பித்ருக்களின் மனம் குளிர மஹாளய பக்ஷம் அவசியம்! / லக்ஷ்மிபதிராஜாவின் சிறப்பு கட்டுரை.
மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களின் ஆராதனை க்ரமம் (ஸ்ராத்தம் - தர்ப்பணம்) மற்றும் பலன்கள்!
பகுதி - 3
தொடர்கிறது...
'காத சதுர்த்தசி' என்று ஒரு தினம். விபத்திலோ, விஷம் அல்லது ஆயுதத்தாலும் உயிரிழந்தவர்களுக்கு மஹாளயபக்ஷத்தில் சதுர்த்தசி அன்று ஸ்ராத்தம் செய்யவேண்டும் என்று நிர்ணயஸிந்து சொல்கிறது. மரம், மலை, மாடி போன்ற உயரமான இடங்களிலிருந்து விழுந்து மாண்டவர்கள், மின்னல், இரும்பு, தாமிர உலோகங்களால் மாண்டவர்கள், மின்சாரம், தண்ணீர், அக்னி, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு மரணமடைந்தவர்கள், தற்கொலை செய்தவர்களுக்கு சதுர்த்தசி திதியில் ஸ்ரார்த்தம் செய்யவேண்டும்.
பிரசவத்தில் காலம் (இறந்தால்) ஆகி இருந்தால் அவர்களுக்கு இது கணக்கில்லை. குறிப்பிட்ட நாளில் ஸ்ராத்தம் செய்ய முடியவில்லை என்று சொல்பவர்கள், அமாவாசை தினத்தில் செய்யலாம்.
பாத்ரபத அமாவாஸைக்கு, `மஹாளய அமாவாஸை’ (அ) `ஸர்வ பித்ரு அமாவாஸை’ என்று பெயர். மேலும், மத்வ மதப்பரம்பரையில் ஆச்சாரியர் ஸ்ரீ மத்வரின் சிஷ்யர்களில் நான்காம் சிஷ்யரான 'ஸ்ரீ மாதவ தீர்த்தருடைய ஆராதனை' தினமும்கூட.
சில பேர் கணவர் இல்லாதவர்களாக இருக்கலாம். குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம். அப்போது தனது கணவனை உத்தேசித்து வேறு ஒரு பிராமணர் மூலமாக செய்ய வேண்டும். அந்த ஸ்திரீகள் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். அந்த பிராமணரிடம் பவித்ரத்தை கொடுத்து பெயர், கோத்திரம் எல்லாம் சொல்லி ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். இதில் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையினால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றால், ஒரு 'கௌண காலம்' என்று உள்ளது. அதாவது பாத்ரபத கிருஷ்ண பக்ஷ பஞ்சமியில் இருந்து ஆஸ்வீஜ ஸுக்ல பக்ஷ பஞ்சமி வரைக்கும் உள்ள தினங்களிலே ஏதாவது ஒரு நாள் செய்யலாம்.
அதுவும் முடியவில்லை என்றால், தீபாவளி அமாவாஸை தினம். பல மாதத்தில் (அதிக) இது கிடையாது. நிஜ மாதத்தில்தான் செய்ய வேண்டும். துலா மாதம் கடைசி வரை பித்ருக்கள் காத்துக் கொண்டு இருப்பார்கள். அன்றைய தினம் தனியாக ஸர்வ பித்ருக்களுக்கும் தர்ப்பணம் கொடுக்க சங்கல்பம் செய்து, பகவானுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ரு தேவதைகளின் அந்தர்யாமியான ஸ்ரீ ஜனார்த்தன ரூபி பகவானுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
எனவேதான், மஹாளயபக்ஷ காலம் என்பது சுபகாரியங்களோ, வேறு பல காரியங்களையோ செய்வதற்கான காலம் அல்ல. பித்ருக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட காலம். இதைச் செய்வதால், ஸம்பத்து ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், விவாஹம், ஸந்தான பாக்கியம், புகழ், கீர்த்தி என எல்லாவற்றையும் பித்ரு தேவதைகள் விசேஷமாக அனுக்கிரஹம் செய்வார்கள்.
மஹாளயபக்ஷத்தில் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பது விசேஷம். சில விசேஷ பலன்கள் உண்டு. செல்வம், நல்ல சந்தான பாக்கியம், நினைத்த காரியங்கள் நிறைவேறுதல், சத்ருக்களின் உபாதைகள் நீங்குதல், புகழ், ஸத்கதி, ஞானம், அறிவுக் கூர்மை, நல்ல வாழ்க்கைத் துணை, நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறுதல், கலைகளில் வளர்ச்சி, நல்ல ஆடை ஆபரணங்கள், தொழில் வியாபார விருத்தி, பாவங்களின் பரிகாரமாகி, புண்ணியம் பெறதல், வாழ்க்கைக்குத் தேவையான வளங்கள் பல பெற்று மோட்சமும் கிடைக்கிறது எனப் பல்வேறு பலன்கள் கூறப்பட்டுள்ளது.
இதனை சிரத்தையோடு செய்ய வேண்டும். கிரகத்தில் செய்தால் விசேஷம். கர்த்தா மட்டும் என்று இல்லாமல் மனைவி, குழந்தைகள் பேரன்கள் என எல்லோரும் குடும்பத்தோடு பங்கு கொள்ள வேண்டும். அவர்களுக்கு இத்தகைய ஸம்ஸ்காரம் ஏற்பட்டு, அவர்களும் தங்களால் முடிந்த சேவைகளை செய்ய வேண்டும் . உடலினால், பொருளால், மனத்தால் செய்யலாம். பாராயணம் செய்யலாம்.
எல்லாவற்றிற்கும் பித்ருக்களின் ஆசிகள் உண்டு. ஒரு நாளாவது விடுமுறை எடுத்துக் கொண்டு, குடும்ப சகிதமாக பங்கு கொண்டு, சேவை செய்து பித்ருக்களின் ஆசிக்கு பாத்திரமாகி சந்தான பாக்கியம், ஆயுள், ஆரோக்கியம், ஞானம், பக்தி, வைராக்கியம் பெற வேண்டும். எவ்வளவு முடியுமோ பித்ருக்களை ஆராதனை செய்து பகவானின் அருளுக்கு பாத்திரராக வேண்டும்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!
திரு. லக்ஷ்மிபதிராஜா அவர்களின் பிரவச்சனத்தில் இருந்து எழுதப்பட்டவை...
எழுதியவர் மந்த்ராலய மாமி, திருமதி லக்ஷ்மி பார்த்தசாரதி மற்றும் ராஜபாளையம் திருமதி லக்ஷ்மி பாஸ்கரன் அவர்கள்...
Ref: Hari Vamsa, Dharma Sindhu, Nirnaya Sindhu, Sri Sudha Monthly Magazine, Harikathamruthasara, Pravachana by Scholars
இவர்கள் அத்துணை பேருக்கும் நமது பத்திரிகை சார்பாக, கோடான கோடி நன்றிகள்! - ஆசிரியர்
தேதி: 21.09.2024
கருத்துகள்
கருத்துரையிடுக