தீப ஒளியால், வாழ்வில் ஒளிமயம் மின்னட்டும் / தீபாவளி நல் வாழ்த்துகள்... 31.10.2024
தித்திக்கும் தீபாவளி வந்துவிட்டது எத்திசையிலும் இந்தத் தீபாவளிப் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபம் என்றால் ‘‘விளக்கு’’ என்று பொருள். ‘‘ஆவளி’’ என்றால் ‘‘வரிசை’’ என்று பொருள். வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். சில பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாக இருக்கும். ஆனால், தீபாவளி அப்படி அல்ல; இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல பகுதிகளிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் குதூகலமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையின் பல்வேறு சிறப்புகளை நாம் பார்க்கலாம்
வைதீகமும் லௌகிகமும் இணைந்த பண்டிகை
சில பண்டிகைகள் வைதீகமானவை; சில பண்டிகைகள் லௌகீகமானவை; சில பண்டிகைகள் சிறுவர்களுக்கு சந்தோஷம் தரும். சில இளைஞர்களுக்கு சந்தோசம் தரும். சில பண்டிகைகள் பெரியவர்களுக்கு சந்தோஷம் தரும். சில பண்டிகைகள் பெண்களுக்கு சந்தோசம் தரும். ஆனால், வயது, பால், இனம், மொழி என்ற எந்த வேறுபாடும் இன்றி, எல்லோருக்கும் குதூகலம் தரும் ஒரே பண்டிகை தீபாவளிதான்.
எல்லாம் கலந்த பண்டிகை
பெரும்பாலும் பண்டிகைகள் உபவாச விரதங்களாக இருக்கும். அதில் வழிபாடு மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆனால், உபவாசம், வழிபாடு இவற்றோடு ஆடல், பாடல் என அமர்க்களமாக உள்ள பண்டிகை தீபாவளிதான். தீபாவளி பண்டிகையில் நாவுக்குச் சுவையான இனிப்பு உண்டு அழகான ஆடை அணி கலன்கள் கொண்டு புத்துணர்வு தரும் உறவு தேடல்களும் விளையாட்டுக்களும் உண்டு. இத்தனையும் கலந்ததுதான் தீபாவளி
தீபாவளிக்கு முன்னும் பின்னும்
ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி தான் தீபாவளி நாள். அதைத் தொடர்ந்து அமாவாசை வந்துவிடும் தொடர்ந்து முருகனுக்குரிய கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்துவிடும். தீபாவளி குதூகலத்துடன் இறை வழிபாட்டிற்குரிய விரதங்களும் இணைந்து இருப்பது தீபாவளியின் மிகப் பெரிய சிறப்பாகச் சொல்லலாம். வைணவர்களுக்கு கண்ணனைக் கொண்டாடும் நாள் சைவர் களுக்கு பாற்கடலைக் கடைந்த போது சிவபெருமான் ஆலகால விஷம் உண்டு உலக உயிர்களைக் காப்பாற்றிய நாள். பெண்களுக்கு கேதாரகௌரி எனப்படும் தீபாவளி நோன்பு விரதம் இருக்கும் நாள். இப்படி ஒவ்வொருவருக்கும் தீபாவளி என்பது ஒவ்வொரு காரணத்திற்காக இருந்தாலும் எல்லோருக்குமான பண்டிகையாக இருக்கிறது தீபாவளி.
கங்கையும் தீபாவளியும்
தீபாவளி என்றாலே முதல் கேள்வி கங்கா ஸ்னானம் ஆச்சா என்பதுதான். தீபாவளியின் பிரதான நிகழ்வே கங்கை நீராட்டம் தான். கங்கை வடநாட்டில் அல்லவா ஓடுகிறது. தீபாவளி அன்று வடநாட்டில் ஓடுகின்ற கங்கையில் எப்படி நீராட முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் பெரியவர்கள் என்ன சொல்லி இருக்கின்றார்கள் என்றால், தீபாவளி அன்று நீங்கள் எந்த நீரில் நீராடினாலும், அந்த நீரில், அன்று மட்டும் கங்கையின் புனிதம் நிறைந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். தீபாவளி அன்று நீராடும் போது கங்கையை நினைத்து இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்ல வேண்டும்.
பாகீராதி சுக-தாயினி மாதஸ்-தவ ஜல-மஹிமா நிகமே க்யாதஹ்
நாஹம் ஜானே தவ மஹிமானம் பாஹி க்ருபாமாயி மாம்-அஜ்ஞானம்
பாகீரதி, ஓ சுகங்களை தருபவளே, உனது புனிதம் தெரியும், உன் பெருமையை நான் அறியேன். அடியேனை நீ காக்க வேண்டும். என் பாபங்களை நீக்கி, எனக்கு கருணை காட்டி, என் அறியாமை எனும் இருளை நீக்க வேண்டும். (பகீரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பாகீரதி என்று ஓரு பெயர்)
கங்கைக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?
கங்கையானவள் பூலோகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல; ஆகாய லோகத்திற்கும், பாதாள லோகத்திற்கும் உரியவள் என்கிறது விஷ்ணுபுராணம். ஜானவி, திரிபதாகை, பாகீரதி, தேவிநதி, மந்தாகினி, வரநதி, உமைசுர நதி, தசமுகை நதி, சிர நதி, தெய்வ நதி, விமலை என பல்வேறு திருப்பெயர்களால் கங்கையைச் சிறப்பிக்கின்றன புராணங்கள். தீபாவளி கங்கா ஸ்நானத் தின்போது இந்தத் திருப்பெயர்களை ஒருமுறை உச்சரித்தாலே நம் பாவங்கள் நீங்கும்; புண்ணியம் பெருகும். இறக்கும் தருவாயில் வாயில் விடும் தீர்த்தம் கங்கையாக கருதப்படும். யமனிடமிருந்து மீட்கும் சக்தி உன் ஒரு துளி கங்கையின் புனித நீருக்குத்தான் இருக்கிறது’ என்கிறார் மகாகவி காளிதாசன். இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கங்கையின் தோற்றமும் பெருமையும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “கங்கையில் நீராடி னவர்களின் ஏழு தலைமுறைகளுக்கு பாவம் அணுகாது. ஒரு மனிதனின் அஸ்தி, கங்கை நீரில் கரைந்தால் அந்த மனிதன் சொர்க்கத்திலே பெருமைப்படுத்தப்படுவான். கங்கையில் யார் நீராடினாலும் பிறந்த நாளிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும்’’ என்கிறது மகாபாரதம்.
தீபாவளியன்று சேவிக்க வேண்டும்
கங்கை நீராட்டம் என்பது சரி; ஆனால் தீபாவளி ஐப்பசி மாதத்தில் (துலா) அல்லவா வருகிறது. ஐப்பசி மாத புனித நீராட்டம் துலாஸ்நானம் என்று சொல்லப்படும் காவிரி நீராட்டத்துக்கு பெருமை பெற்றது. காவிரியின் கரையில் தானே வைணவர்களுக்கு ‘‘கோயில்’’ என்று வழங்கப்படும் திருவரங்கமும், சைவர்களுக்கு கோயிலான சிதம்பரமும் அமைந்திருக்கிறது. எனவே தீபாவளி அன்று காவேரியில், குறிப்பாக அம்மா மண்டபத்திலோ, இல்லை கும்பகோணத்திலோ, இல்லை மாயவரத்தில் துலா கட்டத்திலோ நீராடி, திருவரங்கநாதரையோ, சார்ங்கபாணி, சக்ரபாணியையோ, பரிமளரங்க நாதரையோ சேவிக்க வேண்டும். இந்த மூன்று தலங்களிலும் தீபாவளி மிக விசேஷமாகக் கொண்டாடப்படும்.
திருவரங்கத்தில் தீபாவளி
தீபாவளி என்றாலே ஜாலிதான். திருவரங்கத்தில் பெருமாளும் அன்று ஜாலி அலங்காரத்தில் கொண்டாடுகிறார். ஜாலி அலங்காரம் என்பது தீபாவளி அன்று மட்டும் நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் சமர்ப்பிப்பது ஆகும். தீபாவளி அன்று பெருமாளுக்கு எண்ணெய்க் காப்பிட்டு, திருமஞ்சனம் செய்து, புதிய பட்டாடை அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும், கிளி மண்ட பத்துக்கு எழுந்தருளச் செய்த பின் சிறப்புத் திருமஞ்சனம் நடை பெறும். உற்சவரான நம் பெருமாள் புறப்பட்டு சந்தன மண்டபத்துக்கு வந்ததும் வழிபாடுகள் நடைபெறும். அதற்குப் பின், அவர் ஆஸ்தான மண்டபத்துக்கு வருவார். அங்கே பெருமாளுக்கு விசேஷமான ‘ஜாலி அலங்காரம்’ செய்வர்.
கும்பகோணத்தில் சார்ங்கபாணி பெருமாள் கோயிலில் தீபாவளி
பெரும்பாலும் தீபாவளி அன்று அமாவாசையும் சேர்ந்து வந்துவிடும். அப்படி இருந்தாலும்கூட நரக சதுர்த்தி அன்று மட்டும் சூரிய உதயத்துக்கு முன்னாலே எண்ணை தேய்த்து நீராடுவது என்பது அனுமதிக்கப்பட்டது. ஆனால் அதே தினம் அமாவாசை இருந்தால் அன்றைக்கு நாம் முன்னோர்களுக்கு நீத்தார் கடனும் இயற்ற வேண்டும். தீபாவளி அமாவாசையில் குடந்தை சார்ங்க பாணி பெருமாள், தன்னுடைய பக்தருக்காக சிராத்தம் செய்வதாக ஒரு வரலாறு இருக்கிறது. தன்னை நம்பிய பக்தனை எப்படி பெருமாள் அபிமானிக்கிறார் என்பதற்கான கதை அது. அந்த பக்தர் லட்சுமி நாராயணன். அவருடைய சிலை ஒன்றும் கோயில் வடமேற்கு பிரகாரத்தில் உள்ளது. அது என்ன கதை. தீபாவளி அமாவாசையில் பெருமாள் அவருக்கு ஏன் சிராத்தம் செய்ய வேண்டும்?
திருமலையில் தைல பிரசாதம்
திருமலையில், தீபாவளிக்கு முதல் நாள் இரவு எட்டு மணிக்கு, நான்கு மாட வீதிகள் வழியாக கோயில் அர்ச்சகர்கள் பெரிய `கேன்'களில் நல் லெண்ணையைக் கொண்டு வருவார்கள். அப்போது அங்குள்ள பக்தர் களுக்கும், கோயிலில் பணியாற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர் களுக்கும் நல்லெண்ணெய் பிரசாதமாக விநியோகிக்கப்படும். (இந்த வழக்கம் ஸ்ரீரங்கத்திலும் உண்டு. இன்னும் சில குறிப்பிட்ட திருத்தலங்களில் உண்டு) இந்த எண்ணெயை பக்தர்கள் தீபாவளி அன்று விடியற்காலை பூஜித்து தலையிலும் உடலிலும் தேய்த்து நீராடுவார்கள். தீபாவளி அன்று காலை. ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை, பங்காரு வாசல் (தங்க வாசல்) முன்பு தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். கண்டா மண்டபத்தில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று கல்யாண உற்சவ சேவைகள் இருக்காது.
கேதாரகௌரி விரதம்
கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும், சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரதத்தினை அனுட்டிப்பதுண்டு. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிந்து இந்த தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார். இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாகக் கூறுகிறது ஸ்கந்தபுராணம்.
மஹாலஷ்மி பாற்கடலில் அவதரித்த நாள்
மஹாலஷ்மி பாற்கடலில் அவதரித்த நாள் தீபாவளி என்பார்கள். அன்று மஹாலஷ்மியையும், செல்வங்களுக்கு அதிபதியான குபேரனையும் பூஜை செய்வார்கள். தீபத்திலும் எண்ணயிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், தைலம் (எண்ணெய்) தேய்த்து நீராடி, தீபமேற்றி மஹாலஷ்மியை வர வேற்கிறோம். தீபாவளித் திருநாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, ஸ்ரீகாமாகட்சி அம்மையையோ, மகாலட்சமியையோ போற்றி வழிபட, சர்வ மங்கலங்களும், சம்பத்துக்களும் நம்மை வந்தடையும். எத்தனை வறுமை இருந்தாலும், தீபாவளித் திருநாளில் புத்தாடை உடுத்தி, தீபமேற்றி, சுவையான உணவுகள் உட்கொண்டு, மகிழ்ச்சியாக இருக்கிறோம் அல்லவா. இனி வரும் நாள்கள் இதே மகிழ்ச்சி இருக்கட்டும் என்ற நேர்மறை எண்ணங்களுக்கான பண்டிகைதான் தீபாவளி. பணச் சுழற்சிக்கு உதவும் பண்டிகை என்பதால் பொருளாதார வல்லுநர்கள், இதை போன்ற பண்டிகைகளை வரவேற்கின்றனர்.
லட்சுமி குபேரன் கோயில்
இந்தியாவிலேயே லட்சுமி குபேரரருக்கு என ஒரு கோயில் சென்னையை அடுத்த வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் என்ற ஊரில் இருக்கிறது. இது 500 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். தீபாவளி தினத்தன்று குபேரனை வழிபடுவது சிறந்த பலன்களை அளிக்கும் என்பதால், அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம். லட்சுமி குபேரன் கோயிலில், சிரித்த முகத்துடன், அன்னை லட்சுமி கட்சி அளிக்க, குபேரன் தன் துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார். சன்னதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவகிரகங்களுக்கு தனித்தனி பிரகாரங்களும் உள்ளன. செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், குபேரனையும் தீபாவளித் திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால் வாழ்வில் வறுமை ஒழிந்து செல்வம் செழிக்கும்.
கூட்டமில்லாத கோயில்களே இல்லை
நகரேஷு காஞ்சி என்று சொல்லப்படும் புனிதமான காஞ்சி மாநகரத்தில் தீபாவளி தினத்தன்று காஞ்சி ஏகாம்பரநாதரும் காமாட்சி அம்பாளும் திருவீதி உலா வருவது சிறப்பான நிகழ்ச்சி. காஞ்சி காமாட்சி உற்சவர், லட்சுமி, சரஸ் வதி தேவிகளுடன், திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி, நான்கு ராஜ வீதிகளில் உலா வருவது வழக்கம். காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து சோமாஸ்கந்தர் ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் தீபாவளி அன்று வருவதும் கண்கொள்ளாக் காட்சி. இதைப் போல பல சிவாலயங்களில் சுவாமி வீதி உலா தீபாவளி அன்று உண்டு. சிறப்பு வழிபாடுகளும் உண்டு. காசியில் கங்கா ஆரத்தி மிக மிக விசேஷம். அன்னபூரணி லட்டுத்தேர் சிறப்பு. ராமேஸ்வரத்திலும் தீபாவளி அன்று சிறப்பு வழிபாடுகள் உண்டு. தீபாவளி நோன்பினை கோயிலிலுக்குச் சென்று பூஜை செய்து நிறைவு செய்வதால் எல்லா கோயில்களிலும் கூட்டம் இருக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழனி முருகன் கோயிலிலும், திருச்செந்தூரிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் குவியும். தஞ்சாவூர் மேலவீதியில் கோயில்கொண்டு, அருள்பாலித்து வரும் ஸ்ரீபங்காரு காமாட்சியம்மனுக்கு அம்மன். தீபாவளி நன்னாளில் முறம் ஒன்றில் அதிரசம், முறுக்கு எனப் பண்டங்களை எடுத்து வந்து படையலிடுவார்கள். 11 அல்லது 21 என எண்ணிக்கையில்) பலகாரங்களை எடுத்து வந்து படையலிட்டு, அம்மனை வணங்கிப் புத்தாடை அணிந்து கொண்டால், வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்; மாங்கல்ய பலம் பெருகும்
ஆனந்தக் கொண்டாட்டம் தான் தீபாவளி
இனி, நிறைவாக நரக சதுர்த்தி (தீபாவளி) கொண்டாடும் அடிப்படை கதையான நரகாசுரன் கதைக்கே வருவோம். பொதுவாக சுரன், அசுரன் என்பது தனி நபர்களை குறிப்பது அல்ல. அது குணங்களைக் குறிப்பது. பாபங்களின் கூட்டத்தை அசுரன் என்றும், நல்ல குணங்களின் தொகுப்பை சுரன் அல்லது தேவன் என்றும் குறிப்பிடுவது வழக்கம். நம்முடைய மனதில், கலி தோஷத்தாலும், கர்மதோஷத்தாலும், வாழும் பூமி கர்ம பூமி என்பதினாலும், இந்த இரண்டு குணங்களும் இருப்பது இயல்பு. பாப குணங்களைக் கண்டுபிடித்து, நாம் நாசம் செய்யாவிட்டால், அந்த குணங்களே நம்மை நாசம் செய்து விடும். பாப குணங்களை தெய்வ பலத்தாலும் மன உறுதியாலும் தான் இனம் கண்டு வெல்ல முடியும். அப்படி பாப குணங்கள் நாசம் அடைகின்ற பொழுது நம்முடைய மனதிலே, மகிழ்ச்சியும் திருப்தியும் தோன்றும்.
முடிவுரைபாப குணங்களாகிய நரகாசுரனை இனம் கண்டு, கண்ணன் எனும் இறைவனின் துணை கொண்டு, வெல்வதால் இயல்பாக கிடைக்கும் ஆனந்தக் கொண்டாட்டம்தான் தீபாவளி. எது அழிய வேண்டுமோ (நரகாசுரன் எனும் பாபங்கள்) அது அழிந்து, எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்தால் அதைவிட மகிழ்ச்சியான கொண்டாட்டம் வேறு என்ன மனிதனுக்கு இருக்க முடியும்?
✒ நன்றி: கோகுலாச்சாரி
தேதி: 30.10.2024
கருத்துகள்
கருத்துரையிடுக