வைகுண்ட ஏகாதசியின் மகிமை - வைகுண்ட ஏகாதசி - 10.01.2025 / சிறப்புக் கட்டுரை

ஏகாதசி விரத மகிமை 

மார்கழி  மாதமானது உத்திராயணம் என்கின்ற தேவர்களின் பகல் பொழுது காலத்தின் துவக்ககாலமாக, அதாவது உத்தராயணத்தின் பிரம்ம முகூர்த்த காலம். அது வழிபாட்டுக்குரிய நேரம் என்பதால் மாதங்களில் நான் மார் கழியாக இருக்கின்றேன் என்று பகவான்   கண்ணன் கீதையில் மகிழ்ந்துரை செய்தார்.  மார்கழி மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உண்டு. தேய்பிறை ஏகா தசிக்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர். 

வளர்பிறை ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி அல்லது முக்கோடி  ஏகாதசி என்று பெயர். விரதங்களில் ராஜவிரதம் என்று ஏகாதசி விரதத்தைத்  சொல்வார்கள். இந்த விரதத்தை பகவானே அனுஷ்டிப்பது ராமாயண மகாபாரத இதிகாச புராணங்களில் வருகின்றது. சகல தேவர்களும் இந்த விரதங்களை அனுஷ்டிக்கின்றார்கள். ஏகாதசி விரதத்தின் மகத்துவம் சொல்லில் அடங்காதது. ஒருவருடைய இம்மைத்  துயரங்களை நீக்கி மறுமையில் மிகப் பெரிய பதத்தைப் பெற்றுத் தருவது இந்த விரதம்.

மஹாவிஷ்ணுவை எதிர்த்த அசுரன்  

வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். 12 வளர்பிறை ஏகாதசிகளும் 12 தேய்பிறை ஏகாதசிகளும் வரும். சில ஆண்டுகளில் அதிகப்படியாக ஒரு ஏகாதசியும் வரும் இத்தனை ஏகாதசிகளின் ஆரம்பம் மார்கழி மாத தேய்பிறை ஏகாதசியில்தான் தொடங்குகிறது என்பதால் அதனை உற்பத்தி ஏகாதசி என்றார்கள். உற்பத்தி ஏகாதசிக்கு அடிப்படையான கதை முரண் என்கின்ற அசுரனின் கதை. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு இந்த விரதம் தோன்றிய கதையை,  எடுத்துரைக்கிறார்.  

முரணும் ஏகாதசியும்

சத்யயுகத்தில், சந்திராவதி எனும் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு, முரண்  என்றொரு அசுரன் வாழ்ந்து வந்தான். இந்திர பதவியை பறித்துக்கொண்டு அவனை அடித்து  விரட்டி  மக்களையும்  மிகவும் துன்புறுத்தினான்.  இத்துன்பத்திலிருந்து விடுபடத் தகுந்த உபாயம் கூறி தங்களைக் காக்கும்படி அனைவரும் மகாதேவரை சரணடைய, அவர் ஸ்ரீஹரியை சரணடையுங்கள். 

அவர் உங்களைக் காத்தருள்வார் என்று யோசனை கூறினார். தேவர்களும் மஹாவிஷ்ணுவிடம்  “முரன் என்னும் அசுரன் அதிகமான வர பலம் கொண்டு விளங்குவதால், தேவர்களை விரட்டியடித்துவிட்டு, அசுரர்களை இந்திரன், வருணன், அக்னி, யமன் என பதவிகளில் நியமித்து விட்டான்.  அவனே சூரியனாகி பூமியைத் தகிக்கிறான். மேகமாகி பேய் மழை பொழிகிறான். இவனிடமிருந்து உலகையும், எங்களையும் காக்க வேண்டும்”  என்று  வேண்டினர்.

அசுரனுடன் போர்

இதனைக் கேட்ட மஹாவிஷ்ணு சந்திராவதி பட்டினம் சென்று அசுரனோடு போர் செய்தார். முரனும், ஆக்ரோஷமாக போர் புரியத் துவங்கினான். பகவான் தனது சக்ராயுதத்தினால், அசுரர்களின் அஸ்திர வித்தைகளையும், மாயாஜாலங்களையும் துவம்சம் செய்தார். ஆனாலும் முரண் அசரவில்லை.  அஸ்திர பிரயோகங்களுக்குப் பிறகும், அவன் போர் செய்து கொண்டே இருந்தான்.

தேவர்கள் கொடுத்த வரம் பழுதாகாமல் இருக்க பகவானும்  அவனுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார்.  1000 தேவ ஆண்டுகள் விடாமல் போர் புரிந்தார். ஒரு கட்டத்தில் சிறிது ஓய்வெடுக்க வேண்டி, பத்ரிகாஸ்ரமத்தில் 28 கஜ தூரம் கொண்ட ஒரு துவாரத்துடன் கூடிய ஹேமவதி என்னும் பெயர் கொண்ட குகையில் சென்று சயனத்தில் ஆழ்ந்தார்.

ஏகாதசி தோன்றினாள் 

பகவானை தேடிய முரன் வாளை உருவி பகவானை கொல்ல நெருங்கிய போது, மஹாவிஷ்ணுவின் தேகத்திலிருந்து திவ்ய அலங்காரங்களுடன், சகல ஆயுதங்களோடும் ஒரு பெண் தோன்றினாள். நிமிட நேரத்தில் ஓங்கார சப்த கர்ஜனையோடு அசுரனுடன் ஆவேசமாகப் போர் புரியத் தொடங்கினாள். அவளை அழிக்க பாய்ந்து வந்த வேளையில் அசுரனை வதம் செய்தாள்.  சிரத்தைக் கொய்து மண்ணில் வீசி அவனை யமலோகத்திற்கு அனுப்பி வைத்தாள்.

விழித்தெழுந்த பகவான், தரையில் கிடந்த முரனின் உடலைப் பார்த்தார்.  அந்தப் பெண் இறைவனை வணங்கினாள். பகவானே!! இந்தக் கொடிய அரக்கன், தாங்கள் சயனித்திருந்த வேளையில் தங்களைக் கொல்ல முற்பட்டான். உங்களது சரீரத்திலிருந்து தோன்றி இவனை வதைத்தேன் என்று கூறி கரம் கூப்பி நின்றாள்.

ஏகாதசி கேட்ட வரம் 

அதைக் கேட்ட ஸ்ரீமந்  நாராயணன் உன் செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீ வேண்டும் வரம் கேள்!!  என்றார். அப்போது அந்தப் பெண்   "நாராயணா!! தேவரோ, அசுரரோ, மனிதரோ, மிருகமோ, பிராணியோ, பட்சியோ எவரொருவர் நான் தோன்றிய நாளில் விரதம் அனுஷ்டிக்கிறாரோ, அவர் பாவங்கள் அனைத்தும் நீங்கி இறுதியில் தங்கள் பதம்  அடைய வேண்டும்" என்று பிரார்த்தித்தாள். பகவான் அவள் கேட்ட வரத்தைத் தந்தார். பெண்ணே, நீ 11ஆம் நாள் தோன்றியதால் உலகத்தோரால் இன்று முதல் ஏகாதசி என அழைக்கப் பெறுவாய்!! என்றருளினார். 


பகவானுக்கு விருப்பமான திதிகளான திரிதியை, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி  வரிசையில் நீ உயர்ந்த இடத்தை அடைவாய் என்றார். எனவே பகவானின் அவதார தினத்தைவிட பகவானின் தேகத்தில் இருந்து தோன்றிய ஏகாதசி முதன்மை பெற்றது.

வைகுண்ட ஏகாதசி தோன்றிய கதை

வைகுண்ட ஏகாதசி ,பரமபத வாசல் திறப்புக்கு ஒரு கதை உண்டு. மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள். நான்முகனிடமிருந்து  வேதத்தை அபகரித்துச் சென்றனர் . நான்முகன் திகைத்து பகவான் நாராயணனிடம் முறையிட்டார். திருமால் குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதரித்தார் அசுரர்களை வதைத்து, வேதங்களை மீட்டார். அப்போது மனம் திருந்திய  இருவரும் தங்களுக்கு முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டினர்.

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று, மது -கைடபர்களுக்காக வைகுண்டத்தின் வடக்கு வாசலைத் திறந்து அவ்விருவரையும் வைகுண்டத்துக்குள்ளே அழைத்துச் சென்றார்.

வைகுண்ட வாசலைத் திறந்து மது கைடபருக்கு முக்தியளித்த ஏகாதசி என்பதால், வைகுண்ட ஏகாதசி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது.   மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியில்    பரமபத வாசல் என்ற   அந்த வைகுந்த துவாரத்தின் வழியாக நாம் பகவானை  சென்று சேவிக்கிறோம் . 

பரமபதத்தில் உள்ள நுழைவு வாசல் வழியாக திருமாமணி மண்டபத்திலே ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவியோடு அமர்ந்திருக்க கூடிய பெருமாளிடம் சென்று, பேரின்பத்தைப் பெற்று, நித்ய கைங்கரியம் செய்யும் வாய்ப்பை பெறுகிறோம் என்று பொருள்.

ஏகாதசியில் உள்ள வாழ்வியல் செய்தி

முதல்  கதையிலிருந்தும், மது கைடவர்கள் கதையிலிருந்தும் வாழ்வியலுக்கு தேவையான இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏகாதசி என்பது பதினோராம் நாள் தோன்றிய பெண் என்பது ஒரு குறியீடு. பஞ்ச கர்ம இந்திரியங்களையும், பஞ்ச ஞானந்திரியங்களையும், மனதையும் ஆக மொத்தம் 11யும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மிகப் பெரிய சக்தியைப்  படைத்து, எந்த அசுர சக்தியையும் வீழ்த்தி விடலாம் என்பதை காட்டியவள் ஏகாதசி. இரண்டாவதாக அசுரர்களாக இருந்தாலும்கூட, ஒன்னு அவர்கள் மனம் திருந்தி பகவானிடம் சரணடைந்தால், அவன் முக்தியையும் தருவான் என்கிற செய்தியையும் நமக்குச் சொல்லித் தருவது இந்த ஏகாதசி 

மது கைடபர் கேட்ட வரம்

"நாங்கள் முக்தியடைந்த இந்நாளில், யாரெல்லாம். முறையாக விரதமிருந்து துளசி மாலை சமர்ப்பித்து உன்னைத் தரிசனம் செய்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் நீ முக்தியளிக்க வேண்டும்!" என்று மது கைடபர்கள் வேண்ட  அதை ஏற்று அருள் புரிந்தார் திருமால். அதனால்தான் வைகுண்ட ஏகாதசியன்று, அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் வடக்குப் புறத்தில் உள்ள வைகுண்ட வாசல் (பரமபத வாசல் ) திறக்கப்படுகிறது. 

வைகுண்டத்தின் வாசலைத் திறந்து மது கைடபர்களுக்கு முக்தி அளித்தது போல், அந்த வைகுண்ட வாசல் வழியாக வந்து தன்னை சேவிப்போர்  அனைவருக்கும் திருமால் நல்ல சௌக்கியமான வாழ்வைத் தந்து நிறைவில் முக்தியளிப்பார்.

எத்தனை பெருமை தெரியுமா?

ருக்மாங்கத மன்னன் தனது நாட்டில் அனைவரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும்படி செய்தாராம். அதனால் மக்கள் அனைவரும் பக்தியிலும், ஞானத்திலும் சிறந்து, நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று நாரத புராணம் கூறுகிறது. அம்பரீஷ மன்னன் ஏகாதசி விரதம் கடைபிடித்து  அடைந்த நன்மைகளை ஸ்ரீபாகவத புராணம் விவரிக்கிறது. பகவானின் சக்கரத்தைப்  பெற்றான் அம்பரீஷ மன்னன். மகாவிஷ்ணு கூர்மமாகவும், தன்வந்த்ரியாகவும், மோகினியாகவும் அவதாரம் எடுத்து பாற்கடலில் அம்ருதத்தை வெளிப்படுத்தியதும் ஏகாதசியன்றே. இப்படி ஏகாதசி விரத பெருமையைச்  சொல்லிக்கொண்டே போகலாம்.பெற்ற தாயைவிட ஆவன செய்யும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம்.

பெற்ற தாய் உடலை மட்டுமே காப்பாற்றுவாள். ஏகாதசி விரதம் ஆன்மாவைக் காப்பாற்றும்.

எப்படி விரதம் இருப்பது?

விரதங்களுக்குள் தலையாயது ஏகாதசி விரதம்.  அனைத்து ஏகாதசிகளிலும்  சிறப்பானது வைகுண்ட ஏகாதசி.  எட்டு வயது முதல் எண்பது வயது வரை மனிதர்கள் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்று ஸ்ம்ருதி வாக்யம் கூறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று, வைகுண்ட வாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசிப்பது மிகவும் முக்கியம். முடிந்தால் ஸ்ரீரங்கம் செல்லலாம். அல்லது அருகிலுள்ள பெருமாள் கோயில் சென்று வழிபடலாம்.

சில கோயில்களில் பரமபதவாசல் இருக்காது. அந்த கோயில்களில் பெருமாளைச் சேவித்தாலே போதும். அன்று தண்ணீர்கூட உட்கொள்ளாமல் (நிர் ஜலமாக) விரதம் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். 

அவ்வாறு விரதம் இருக்க இயலாதவர்கள், பால் பழம் எளிய  பலகாரங்களை உட்கொள்ளலாம். மறுநாள் துவாதசியன்று காலை பூஜை செய்து பெருமாளின் தீர்த்தத்தை உட்கொண்டு, அதன்பின் அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை உணவு வோடு உட்கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 

இவ்வாறு விரதத்தை நிறைவு செய்வதற்கு துவாதசி பாரணை என்று பெயர். அன்றும் பகலில் உறங்காமல் இருந்து மாலை சூரியன் மறைந்த பின்தான் உறங்க வேண்டும்.

செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்

ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவை சாப்பிட வேண்டும். ஏகாதசி நாளில் முழுமையாகப் பட்டினி கிடக்க வேண்டும். இரவு உறங்காமல், திருமால் சரிதங்களையும் ஸ்லோகங்களையும் படிக்கலாம் கேட்கலாம். ஏகாதசியன்று அன்னதானம் செய்யக் கூடாது. 

பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை செய்ய வேண்டும். முடியாதவர்கள் பகவானுடைய நாமங்களைச் சொல்ல வேண்டும். ஏகாதசி தினத்தில் கோபம் கொள்ளக் கூடாது. பிறரை தூஷித்தல், கடுமையான வார்த்தை சொல்லுதல், சந்தனம் பூசுதல், வெற்றிலை போடுதல், மாலை அணிதல், கண்ணாடி பார்த்தல் முதலானவை கூடாது.

  - நன்றி: கோகுலாச்சாரி

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 09.01.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்