தீட்டு என்றால் என்ன? தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? / கேள்வி - பதில்
- வி.சுமதி, திருச்சி
தீட்டு என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலம் காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்து தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு.
இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு
தீட்டு தானே. அதனால்தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப்
பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.
தீட்டுடைய இந்த உடலை வைத்து,
எப்படிக் கடவுளை வழிபட முடியும்--? சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல
உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்காக இறைவனின் பெயரைச்
சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக
இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.
தீட்டு என்பது வேறு,
அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்ற ஐந்தும் ஆகும். முதலில்
காமத்தீட்டு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம். காமம் என்பது ஆசை.
நாம் எந்தப் பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே
ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக
இருப்போம்.
அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப்
பொருள் கிடைத்துவிட்டால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இல்லையென்றால்
மனதில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச்
சிந்தனை செய்ய முடியாது. இதனால்தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே
என்கிறார்கள்.
இரண்டாவதாக குரோதத் தீட்டு என்பதன் விளக்கத்தினைக் காண்போம்.
குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே
பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும்
சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும்
நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம்
அனுபவிப்பார்கள், சிலர் தூக்கில் இடப்படுவார்கள்.
கோபத்தைப்போல் கொடியது
உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான
கோடிப்பேர்.கோபம் எழும்பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள்
செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது.
கோபத்தால் உணர்ச்சி
வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச்
சிந்தனை செய்ய முடியாது. இதனால்தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத்
தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு. மூன்றாவதாக
வருவது லோபத் தீட்டு.
லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால்தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள். இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.
அடுத்து வருவது மதத்
தீட்டு. மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மமதையோடு
இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வத்தினையும் தருவது.
தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் ஆணவத்தால் யாவரையும்
துன்பப்படுத்தித் தான் மகிழ்ச்சி அடையும் குணத்தினையும் தருவது.
இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?
இதனால்தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர்.
கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு. இறுதியாக வருவது மாற்சரியத் தீட்டு.
மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல்
வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியாக இல்லையே என்று தன்னையே
நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள்
எப்பொழுது கஷ்டப்படுவார்கள், எப்பொழுது செத்துப்போவார்கள் என்று
எண்ணத்தூண்டுவது.
தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால்தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.
இவை ஐந்தும் மாபெரும்
தீட்டுகள். இவற்றைத் தொடுபவர்களே தீட்டு உடையவர்கள் ஆகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 24.03.2025
தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக