வியக்கவைக்கும் வேத வியாசர் / பகுதி – 2
வியக்கவைக்கும் வேத வியாசர்
பகுதி – 2
பகுதி - 1யின் தொடர்ச்சி...
ஸ்ரீ வேத வியாசர், ரிக் வேதத்தை பைலருக்கும், கிருஷ்ண யஜுர் வேதத்தை, வைஸம்பாயனருக்கும், ஸூக்ல யஜுர் வேதத்தை சூரியருக்கும், ஸாம வேதத்தை ஜைமினிக்கும், அதர்வண வேதத்தை ஸூமந்துவுக்கும், மஹாபாரதத்தை வைஸம்பாயனருக்கும் உபதேசம் செய்து, அவர்கள் மூலமாக அதனை பிரச்சாரம் செய்ய வைத்தார்.
ஸ்ரீ வேத வியாசர், தமது மெய்சிலிர்த்து, அதிலிருந்து ரோமஹர்ஷனரைப் பிறக்க வைத்தார். அவருக்கு மஹாபாரதம், மூல ராமாயணம், பஞ்சபாத்திரம் போன்றவற்றை உபதேசித்து, ஞான பரம்பரையை முன்னெடுத்துச் செல்ல ஆணையிடுகிறார். ரோமஹர்ஷனரிடம் காமன் பிரவேசம் செய்து, வேத வியாசருக்கு சேவைகள் புரிந்தார்.
ஸ்ரீ வேத வியாசர், இன்றும் மேல் பத்ரியில் வாசம் செய்து கொண்டு, முனிவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டுள்ளார். வாயு பகவானின் அவதாரமான ஸ்ரீமன் மத்வாசாரியார் இரண்டு முறை மேல் பத்ரிக்குச் சென்று ஸ்ரீ வேத வியாசரை தரிசித்து, அவரின் ஒப்புதலுடன் `பிரம்ம ஸூக்ர பாஷ்யம்', `ஸ்ரீமன் மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம்' முதலான கிரந்தங்களை ரசனை செய்து உள்ளார்.
அதிலும் ஸ்ரீ வேத வியாசர் ரசனை செய்துள்ள மூல மஹாபாரதமானது 60 லக்ஷம் ஸ்லோகங்களைக் கொண்டது. பூலோகத்தில் நமக்கு கிடைப்பது வெறும் ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் மட்டுமே.
ஸ்ரீ வேத வியாசர், பாரதத்தை இயற்றுகையில், கருத்துக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும், மேல் நோட்டமாக பார்க்கும் போது, எதிர்மறையான பொருள் படும்படியும் முறையே `தர்ஸன பாஷை', `குஹ்ய பாஷை', மற்றும் `ஸமாதி பாஷை' என மூன்று விதமாக வழங்கியுள்ளார்.
இந்த உயரிய கிரந்தத்தில் உள்ள கருத்துக்களை சரியாகவும், அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளும் வகையில், ஸ்ரீமன் மத்வாச்சாரியார், ஸ்ரீ வேத வியாசரிடத்தில் நேரடியாக அனுமதி பெற்று, அவரின் கட்டளைக் கிணங்க `ஸ்ரீமன் மஹாபாரத தாத்பர்ய நிர்ணயத்தை' இயற்றியுள்ளார்.
இதில், அனைத்து ஸாஸ்திர கிரந்தங்களையும் ஒப்பிட்டு, பாரதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை தீர்மானம் செய்து நிர்ணய கிரந்தமாக அளித்துள்ளார். இன்றும், மேல் பத்ரியில் ஸ்ரீ வேத வியாசருக்கு சேவைகள் புரிந்து, அவரிடம் பாடங்களை கேட்டு வருகிறார்.
`பாவி ஸமீரர்' என்று போற்றப்படுகின்ற `லாதவ்ய' என்னும் ருஜுகணஸ்தரின் அவதாரமான ஸ்ரீ வாதிராஜ தீர்த்தரும்கூட மேல் பத்ரியில் வேத வியாஸரைத் தரிசனம் செய்துள்ளதாக அவருடைய சரித்திரக் குறிப்பில் உள்ளது.
பகவான் ஸ்ரீ வேத வியாசர், பதினான்கு லோகங்களுக்கும் குருவானவர். அவருடைய முக கமலமே பதினான்கு லோகங்களில் இருக்கும் ஞான சமுத்திரத்தின் ஊற்று என்பதனை ஸ்ரீ வேத வியாஸ மந்திரம் போற்றுகிறது. ``வ்யாஸோச்சிஷ்டம் ஜகத் ஸர்வம்" என்பது பிரசித்தி.
ஸ்ரீமன் மத்வாசாரியார் தமது ``தந்த்ர ஸாரா ஸங்கிரகத்தில்'' பகவான் ஸ்ரீ வேத வியாசருக்காக பிரத்யேகமான தியான ஸ்லோகங்கள் மற்றும் மந்திரங்களை குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானம் எனும் ஒளியினால், பிரம்மாண்டத்திற்கு உள்ளேயும் வெளியேவும் நிறைந்து இருப்பவரும், மரகத மணியைப் போல், தூய்மையான ஒளி உள்ளவருமான, ஞான அபய முத்திரைகளைக் கொண்டவருமான பிரம்மா, ருத்ரன் முதலானவர்களுக்கு விஞ்ஞானத்தை உபதேசித்துக் கொண்டு இருப்பவருமான, ஸ்ரீ வேத வியாசரைப் பற்றி வர்ணித்து, 100 கோடி சந்திரர்களின் ஒளியைக் காட்டிலும் அதிக ஒளியை தரக்கூடியவரும், `அ' முதல் அனைத்து அக்ஷர அபிமான தேவதைகளான பிரம்மா, ருத்ர முதலான தேவர்களால் அபிஷேகம் செய்யப்படுபவரும், வேதம் முதலான அனைத்தையும் பிரம்மா, ருத்ரன் முதலான தேவதைகளுக்கு உபதேசம் செய்து கொண்டு இருப்பவருமான, ஸ்ரீ வேத வியாசரைத் தியானித்து வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ வேத வியாஸ மந்திரத்தை உச்சரிப்பதால், மனது ஒருநிலைப் பெற்று ஞாபக சக்தி அதிகரிக்கும். நாம் சந்திக்கும் அனைத்து குருகளுக்கும் மூல குருவாக பகவான் ஸ்ரீ வேத வியாசரே உள்ளார் என்றும், அந்த எல்லா குரு மஹனீயர்களின் உள்ளத்தில், அந்தர்யாமியாக ஸ்ரீ வேத வியாசரே இருந்து நமக்கு உபதேசம் செய்வதாகவும், அனுசந்தானத்துடன் பாட, பிரவசனங்களை கேட்க, ஏன்.. லௌகீக கல்வியைக்கூட நாம் கற்பது அவசியம். பகவானின் பரிபூரண அவதாரமான ஸ்ரீ வேத வியாசரை வணங்குவதால், விசேஷமான ஞானம் சித்திக்கும் என்பது நிச்சயம்!
ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து!!
🖋️: ``பிரசங்க பூஷணம்", ``பிரவசன பூஷணம்",``மத்வ ரத்னா" எஸ்.லக்ஷ்மிபதிராஜா, மேடவாக்கம், சென்னை
அடுத்த தொகுப்பில், லக்ஷ்மிபதிராஜா அவர்கள் எழுதிய ``துன்பங்களை போக்குவாள் துளசி’’ என்னும் கட்டுரையை காணலாம்.
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
கருத்துகள்
கருத்துரையிடுக