துயரங்களை துடைப்பவள் துளசி / துளசி செடியினை பற்றி விரிவாக விளக்கும் ஹரிணி பகடால்...
ஆத்யாத்மம் - ஆயுர்வேதம் என இரண்டும் போற்றக் கூடிய ஒரு செடி என்று சொன்னால் அது துளசிதான். வைஷ்ணவ வீடுகளில் செய்யப்படுகின்ற விசேஷமாக பூஜையை ஏற்றுக் கொள்வாள் துளசி. சர்வோதமனான விஷ்ணுவின் மிகச் சிறந்த சன்னிதானம் இருக்கும் செடி துளசி. துளசியை பக்தியுடன் நினைப்பது பாவங்களை விளக்கும். `துளசி’ என்கிற சொல்லுக்கு நிகரற்றவள் என்று பொருள்.
'துலாம் ஸ்யததி இதி துளசி'
பகவானுக்கு அர்ச்சனை செய்ய கூடிய மிகப் பெரிய பூக்களைவிட, துளசி சிறந்தவள். ஆகையால், இவளுக்கு நிகர் இல்லை. தன்வந்தரி பகவான் விஷ்ணுவின் அவதாரம். சமுத்திர மதனம் சந்தர்பத்தில், தன்வந்தரி பகவான் க்ஷீர சமுத்திரத்திலிருந்து அமிர்த கலசத்தை, தன் கையில் பிடித்து வந்தான். தேவர்களுக்கு அமிர்ததத்தை ஊட்டினான்.
அப்பொழுது, தன்வந்தரி பகவானின் கண்களில் இருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீர், அந்த அமிர்த கலசத்தினுள் விழுந்தது. அந்த கண்ணீர்துளி விழுந்த அமிர்தத்தில் இருந்து பிறந்தவள் துளசி. அவள் பிறப்பாலே உத்தமம் ஆனவள். துளசி இல்லாது செய்யும் எந்த ஒரு பூஜைகளையும் பகவான் ஏற்பதில்லை. புரந்தரதாசர், இவ் விஷயத்தை,
' எல்ல சாதனகளித்து துளசி இல்லத பூஜே ஒல்லனோ ஹரி கொல்லனோ'
- என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்.
பகவான், துளசியை மணர்ந்தார். பகவான் உடைய அன்பிற்கு சான்றானவள் துளசி. பகவான், துளசியை விவாகம் செய்ததன் காரணம், துளசிக்குள் லக்ஷ்மி தேவியின் சாநத்தியம் இருக்கும். லட்சுமிதேவிக்கு பிரியமானவள். ஜகன் நாத தாசர் தம்முடைய கிரந்தமான ``ஹரிகதாம்ருத சாரத்தில்’’ துளசியை வர்ணிக்கும் பொழுது;
'ஸ்ரீ தருணி வல்லவன ப்ரீத்தி விஷியலே'
- என்று போற்றுகிறார்.
துளசி, வைஷ்ணவ விருட்சம். தேவர்கள் ஆஷ்ரம் செய்யும் செடி துளசி. எந்த இடத்தில் ஒரு துளசி செடி இருக்கிறதோ.. அங்கு பிரம்மா, விஷ்ணு, ருத்ர போன்ற தேவதையைகளின் சன்னிதானம் இருக்கும். துளசி இலையின் நடுவில் சர்வோத்தமனான கேசவன் வாசம் செய்கிறான். துளசி இலையின் மேல்ப் பகுதியில் பிரம்மதேவர் வசிக்கிறார். துளசி இலையின் கீழ்பகுதியில் ருத்ர தேவர் வசிக்கிறார்.
லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி, காயத்ரி தேவி, உமா தேவி, சசி தேவி, அக்னி, இந்திரா, யமா, நிருத்தி, வருண, குபேர, வாயு போன்ற அனைத்து தேவர்களும் துளசி செடியில் வாசம் செய்கிறார்கள். துளசி செடிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட ஜலம், கங்கைக்கு சமமானதாகும். ஆகையால்தான், துளசி செடியில் சமர்ப்பணம் செய்யப்பட்ட ஜலத்தை நாம் தலையின் மேல் பிரோக்ஷனம் செய்துக் கொள்கிறோம்.
"என் மூலே சர்வ தீர்த்தாணி
என் மத்யே சர்வ தேவதா
எதக்ரே சர்வ வேதாஷ்ச
துளசி த்வம் நமாம்யஹம்."
துளசி செடியின் மூலத்தில், சர்வ தீர்த்தங்களின் சன்னிதானம் இருக்கிறது. துளசி செடியின் நடுவில், சர்வ தேவர்களின் சன்னிதானம் உள்ளது. துளசி செடியின் அக்ரத்தில், சர்வ வேதங்களின் சன்னிதானம் உள்ளது.
இப்படி பல சிறப்பினைக் கொண்ட துளசியை, நாம் கார்த்திகை மாதத்தில் நன்கு கொண்டாடுவோம்!
✎ ஹரிணி பகடால்,
ஆன்மீக சொற்பொழிவாளர்.
ஸ்ரீமதி. ஹரிணி பகடல், துவைத மதத்தின் மிக சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர். தனது கணவரிடத்திலும் மற்றும் குருவும் பண்டிதருமான, சத்தியநாதாச்சார்யா பகடலிடத்தில் நன்கு பயிற்சி பெற்றவர். ராமாயணம், மகாபாரதம், பாகவத புராணம், மத்வ குரு பரம்பரை, பாரத க்ஷேத்ர மஹிமை (புனிதத் தலங்களின் மகத்துவம்) மற்றும் தாச சாகித்தியம் (ஹரிதாச இலக்கியம்) போன்றவற்றில் ஆகச் சிறந்த சொற்பொழிவாளர். அது மட்டுமா.. ஆங்கிலம், தமிழ் மற்றும் கன்னடத்தில் சரளமாகப் பேசக் கூடியவர்! இதனால் இந்த மூன்று மொழிகளிலும் உபன்யாசம் செய்துவருகிறார். அதே போல், பல தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் இவருடைய உபன்யாசங்களை பார்க்கமுடியும். இத்தகைய ஆன்மீக சொற்பொழிவாளர் நம் `மத்வாச்சாரியா தமிழ் மேகஸினுக்கு’ எழுதுவது நமக்கு பெருமையே..! நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் - ஆசிரியர்
தேதி: 23.11.2023
தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
கருத்துகள்
கருத்துரையிடுக