நல்லதைக் கேட்டதற்கு இத்தனை பலனா? / பரசுராமரின் சிறுகதை
‘ஏதாவது நல்லவைகளைக் கேள்! அவை மிகுந்த உயர்வைக் கொடுக்கும்' என்பது வள்ளுவர் வாக்கு. ‘நல மிக்க நல்லார் சொல் கேட்பதும் நன்றே' - ஔவையார். நல்லது கேட்பதன் பலனை விவரிக்கும் நிகழ்வு இது. ராஜகிருகம் என்ற ஊரில் ரௌஹினேயன் என்ற திருடன் இருந்தான். அவன், தந்தையும் திருட்டையே தொழிலாகக் கொண்டவர். மகனும் தன்னைப் போலவே, சொல்லப் போனால் தன்னை விடப் பெரிய திருடனாக வர வேண்டும் என்பதற்காக, பல விதமான உபதேசங்களையும் மகனுக்குச் சொல்லி வளர்த்து வந்தார், தந்தை.
அவர் செய்த உபதேசங்களிலேயே மிகவும் முக்கியமானது; ‘‘மகனே! உன் திருட்டுத் தொழிலில் தொடர்ந்து நீ வெற்றிபெற வேண்டுமானால், ஹரிகதை - பஜனை நடக்கும் இடங்களுக்குப் போகாதே! அவை உன் காதுகளில் விழாதபடி நடந்து கொள்! ஒருவேளை தவறிப் போய் அவை நடக்கும் இடத்தின் வழியாக நீ போகும்படியாக நேரிட்டால், உன் காதுகளைப் பொத்தியபடி நீ அங்கிருந்து போய்விடு!’’ என்று அடிக்கடித் தன் மகனுக்கு உபதேசம் செய்வார், அந்தத் தந்தை.
மகனும், தந்தை சொல் மீறாமல் நடந்து கொண்டான்; கதா காலட்சேபம் - பஜனை ஆகியவை நடக்கும் இடங்களுக்குப் போகாமல் இருந்தான். அந்தப் பக்கமாகக் கூடப் போக மாட்டான்.
ஒரு கையைக் காதிலிருந்து எடுத்து முள்ளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, மறுபடியும் காதைப் பொத்திக் கொண்டான். அந்த ஒரு சில விநாடிகளுக்குள் மகாவீரரின் உபதேசவார்த்தைகளில் சில, ரௌஹினேயனின் காதில் விழுந்தன. ‘‘தேவர்களுக்கு நிழல் கிடையாது. அவர்கள் கால்கள் தரையில் பதியாது’’ என்று மகாவீரர் சொல்லிக் கொண்டிருந்தார். அது ரௌஹினேயனின் மனத்தில் பதிந்துவிட்டது. ஆனால், அவன் வழக்கப்படிக் கொள்ளையடிக்கப் போய்விட்டான். சில நாட்கள் ஆயின. எதிர்பாராத விதமாக ரௌஹினேயன் அரண்மனைக் காவலர்களிடம் சிறைப்பட்டுவிட்டான். அகப்பட்ட பக்காத் திருடனிடம் இருந்து விவரங்களை அறியப் பல வழிகளிலும் முயன்றார்கள்.
‘‘ஏய்! அரண்னையைத் தவிர, இன்னும் எங்கெல்லாம் திருடி இருக்கிறாய்? என்னென்ன திருடினாய்? எப்படியெப்படித் திருடினாய்?’’ என்றெல்லாம் கடுமையாகக் கேட்டார்கள். எப்படித்தான் கடுமையாகக் கேட்டாலும் ரௌஹினேயன் எந்த விவரங்களையும் சொல்ல மறுத்துவிட்டான். அவனிடம் இருந்து அரசாங்கக் காவலர்களால் எந்தத் தகவலையும் வாங்க முடியவில்லை. கடைசியாக அரண்மனைக் காவலர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். ரௌஹினேயனுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவன் மயக்கம் அடைந்தவுடன் அவனைக் கொண்டுபோய், அழகான ஒரு நந்தவனத்தில் கிடத்தினார்கள். அழகான பெண்கள் பலரை அங்கே ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கச் செய்தார்கள்.மயக்கம் தெளிந்த ரௌஹினேயன் கண்களை விழித்துப் பார்த்தான். அவனுக்கு என்னவோ தேவலோகத்தில் இருப்பதைப் போல் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல, அங்கு ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்த பெண்களில் சிலர், ‘‘ஐயா! இப்போது நீங்கள் தேவலோகத்தில் இருக்கிறீர்கள். தேவ லோகத்தில் பொய் சொல்லக் கூடாது. சொன்னால், தேவலோகத்தை விட்டு நீங்கள் நரக லோகத்திற்குப் போய் விடுவீர்கள்! ஆகையால் நீங்கள் யார் என்ற உண்மையைச் சொல்லுங்கள்!’’ என்றார்கள்.
‘‘அரண்மனையைச் சேர்ந்தவர்கள் நம்மை ஏமாற்றி உண்மையை அறிய முயல்கிறார்கள்’’ என்பதைப் புரிந்து கொண்டான் அவன். ‘‘ஆகா! அந்த மகான், மகாவீரரின் ஓர் உபதேசமே, எனக்கு உண்மையை உணர்த்துகிறதே! அவர் வாக்கைக் கேட்டதால் தானே, இவர்கள் என்னை ஏமாற்ற முயல்வது புரிந்தது. அவருடைய முழு உபதேசத்தையும் கேட்டால், எவ்வளவு நன்மை உண்டாகும்!’’ என்று நினைத்தான் ரௌஹினேயன். உடனே ஒரு தீர்மானத்திற்கு வந்தான். சுற்றியிருந்த பெண்களைப் பார்த்து, ‘‘நீங்கள் எல்லோரும் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்கு மட்டும் விடுதலை கிடைத்தால், இந்த ஈனத்தொழிலான திருட்டுத் தொழிலை இனிமேல் செய்ய மாட்டேன். மகான் மகாவீரரின் சீடனாக ஆகிவிடுவேன்’’ என்றான்.
பெண்கள் ஓடிப் போய் அரசரிடம் தகவலைச் சொன்னார்கள். விவரமறிந்த மன்னர், ரௌஹினேயனை உடனே விடுதலை செய்தார். திருந்திய ரௌஹினேயனும், மகாவீரரின் சீடனாக ஆனான். நல்லவர்கள் வாக்கின் மகத்துவத்தை விளக்கும் நிகழ்வு இது. நல்லதைக் கேட்போம்! நலம் பெறுவோம்!
✏ பி.என்.பரசுராமன்.
நன்றி: பி.என்.பரசுராமன்.
தேதி: 22.02.2024
கருத்துகள்
கருத்துரையிடுக